ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை; அவர் நலமாக உள்ளார். ஆனாலும் சூழல் கருதி அவர் ஹைதராபாத்தில் தனிமை படுத்திக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனி கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட இருப்பதால், அதற்கு முன்பாக தனது காட்சிகளை படமாக்கி முடித்து விடும்படி ‘அண்ணாத்த’ படக்குழுவினரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாதங்களுக்கு பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் தொடங்கி நடந்து வந்தது. இதில் ரஜினி, குஷ்பு, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.
ரஜினிக்கும் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டதில் நெகட்டிவ் என முடிவு தெரிந்தது. ஆனாலும் ஓரிரு தினங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ள ரஜினி, விரைவில் ரஜினி சென்னை திரும்ப இருக்கிறார்.
– என்வழி