தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்கள் பணி! – தலைவர் ரஜினிகாந்த் அறிவிப்பு

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்கள் பணி! – தலைவர் ரஜினிகாந்த் அறிவிப்பு

 

சென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், தேர்தல் அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு பணி செய்யப்போவதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ந்தேதியன்று வெளியிடப்படும் என்றும் கடந்த டிசம்பர் 3-ந்தேதி அறிவித்திருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால், அதற்கு முன்பாக ‘அண்ணாத்த’ படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக படமாக்கி முடித்துவிடும்படி படக்குழுவினரிடம், ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த 14-ந்தேதி முதல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த படக்குழுவில் இருந்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை, ‘நெகட்டிவ்’ என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் ரஜினிகாந்த் ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதற்கிடையே ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து கடந்த 25-ந்தேதி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் குழுவினர் ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் அவருடைய உடல்நலம் நன்கு தேறியுள்ளது. 3 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து திரும்பினார்.

இந்தநிலையில் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைந்தார். ரஜினிகாந்த் உடன் அவருடைய மகள் சவுந்தர்யா காரில் அமர்ந்திருந்தார்.

ரஜினிகாந்த் வீடு திரும்பிய நிலையில், ‘அடிக்கடி ரத்த அழுத்தத்தை கண்காணித்துக்கொண்டு, ஒரு வார காலத்துக்கு வீட்டில் முழு ஓய்வில் இருக்கவேண்டும். உடல் ரீதியான குறைந்தபட்ச செயல்பாடு மட்டுமே இருக்கவேண்டும். மன அழுத்தத்தை தவிர்க்கவேண்டும்’, போன்ற நிபந்தனைகளோடு, கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் அவர் தவிர்க்கவேண்டும் என்று ரஜினிகாத்துக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிறுத்தப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் துவங்குவதில் சிறிது கால தாமதம் ஏற்படும் என்றும், பொங்கல் விடுமுறைக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுபோல் திட்டமிட்டபடி 31-ம் தேதி புதிய கட்சியை ரஜினிகாந்த் அறிவிப்பாரா? என ரஜினி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

வரும் 31-ம் தேதி ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியாவதில் எந்த சந்தேகமும் இல்லை என ரஜினி தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்பட்டது.

திட்டமிட்டபடி டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை ரஜினிகாந்தே வெளியிடுவார் எனவும், கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த தகவலை டுவிட்டர் மூலம் வெளியிடுவார் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். உடல்நலம் குறித்து இருவரும் விசாரித்தனர். இதனை அடுத்து நிருபர்களிடம் தமிழருவி மணியன் கூறும் போது

திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை டுவிட்டர் வாயிலாக வெளியிட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தே கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் எனவும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்னை நம்பி என்னுடன் வருபவர்களை பலிகடா ஆக்க விரும்ப வில்லைஎன நடிகர் ரஜினிகாந்த் – பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரஜினி வெளியிட்ட 3 பக்க அறிக்கை:

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோணா பரிசோதனை செய்வித்தார்.

எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது, மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும்.

ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது,

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார் இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம்.

இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை, இதை ஆண்டவன் பார்க்கிறேன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் நான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.

இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது, இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது.

அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும், கடந்த நவம்பர் 30 – ம் தேதி நான் உங்களைச் சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.

நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்.

– ரஜினிகாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *