அண்மையில் பிரமாண்டமாக நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் பேச்சுதான் இப்போதுவரை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார். அந்தப் பகுதி:
“தளபதி படம் பண்ணும் போது நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
அப்போது இந்தி படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.
மணி சாருடன் முதல் காம்பினேசன். பாம்பேலருந்து நேரா மைசூருக்குப் போய் முதல் நாள் படப்பிப்பில் கலந்துகிட்டேன். நல்லா பளிச்சின்னு மேக்கப் போட சொன்னேன். ஏன்னா.. மம்முட்டி ஆப்பிள் நிறம் போல் இருப்பார்.. நான் கருப்பாக இருந்தேன். பவுர்ணமியும் அமாவாசையும் மாதிரி இருக்குமேன்னு அப்படி மேக்கப் போடச் சொன்னேன்.
என் ஸ்டைலில் மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்டியுமை கொண்டு வர சொன்னேன். எனக்கு லூசா பேண்ட், பனியன், சப்பல் கொடுத்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி.. நான் வழக்கமாக அணியும் பேண்ட், சர்ட் அப்புறம் நான் போட்டிருந்த வாக்கிங் ஷூ அணிந்து கொண்டு படபிடிப்பு தளத்துக்கு போனேன். மணி சார் என்னை பாத்ததும்.. என்ன இன்னும் டிரஸ் சேஞ்ச் பண்ணலையா.. பண்ணிட்டு வந்திருங்ன்னு சொன்னார்.
மாத்தியாசி சார்.. இதுதான்னு என்று சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிட்டு.. அவர் டெக்னீஷியன்ஸ் கூட டிஸ்கஸ் பண்ணிகிட்டிருந்தார். ரொம்ப நேரமாச்சி.. வெயிட் பண்ணிகிட்டே இருந்தேன். ஷூட்டிங் ஆரம்பிக்கவே இல்ல.
முதல் நாள் ஷூட்டிங் ஷோபனாக் கூட. அந்த குளக்கரையில உட்காந்து பேசற காட்சி. ஷோபனா எல்லாரையும் கிண்டல் பண்ற பார்ட்டி. அவர்கிட்ட கேட்டா சரியா தெரியும்ன்னு நினைச்சி, என்ன நடக்குது… ஏன் இன்னும் ஒரு காட்சி கூட ஆரம்பிக்கவே இல்லன்னு கேட்டேன். அவரும் விசாரிச்சிகிட்டு வந்து..
‘என்னாச்சி.. டைரக்ட்டருக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்னையா.. இன்னைக்கு ஷூட்டிங் முதல் நாள்.. வந்ததுக்கு ஷூட்டிங் முடிச்சி அனுப்பி வைச்சிகிட்டு.. அப்புறம் ஹீரோவ கமல போட்டுடலாம்ன்னு பேசிகிட்டிருக்காங்க’ன்னு சொன்னதும்.. ( அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது ) அப்பதான் புரிஞ்சது.. நம்ம இஷ்டத்துக்கு மேக்கப்பும் டிரஸ், ஷூவெல்லாம் போட்டு கிட்டு வந்ததுன்னு.. தெரிஞ்சது.
முதல் நாளே என்கிட்ட இதெல்லாம் சொல்லி எப்படி புரிய வைக்க.. அதுக்கு ஹீரோவை மாத்திடலாம் என்று மணி சொல்ல கேள்விபட்ட பிறகு, அப்புறம் போய் அவங்க சொன்னபடி எல்லாத்தையும் மாத்தி கிட்டு வந்து நடிச்சேன். அப்படி மணி சார் ஒரு கண்டிஷனான இயக்குனர்.
இப்படி மூணு நாள் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. நம்ம எப்பவுமே ஒவ்வொரு காட்சியிலுமே எப்படி நடிக்கணும்ன்னு ஒரு ‘ஸ்டாக்’ வெச்சுருப்போம். இதிலேயும் அப்படிதான் நடிச்சிகிட்டிருந்தேன். ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தேன். இன்னும் பீல்.. கொடுங்கன்னு திரும்ப திரும்ப சொல்லிகிட்டேயிருந்தார். இதுக்குமேல என்ன பீல் பண்ண.. நாம தான் ஒரு டெம்ப்ளேட் வைச்சிருக்கோமே… அப்படிதான் நடித்து முடிச்சேன். நான் அப்போ நடிச்சிகிட்டிருந்ததெல்லாம், எட்றா வண்டியா… தூக்குடா.. அடிடா.. அப்படிதான் (அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது) எப்படியோ அன்னைக்கு ஷூட்டிங் முடிந்தது.
தினமும் இது இப்படியே போய்கிட்டிருந்தா சரியா வராதுன்னு நினைச்சி.. கமலுக்கு போன் பண்ணி… ரொம்ப கஷ்டமா இருக்கு கமல், 10 டேக்.. 12 டேக்கெல்லாம் எடுக்கிறாரு.. இன்னும் கொஞ்சம் பீல் பண்ணி நடிக்க சொல்றாரு.. அப்படி நடந்ததை எல்லாம் சொன்னேன்.
மணி படம் நீங்க நடிக்கும் போதே நான் நினைச்சேன். சரியா மாட்டுனீங்களா.. மணிகிட்ட நான் எவ்வளவு அனுபவிச்சிருப்பேன்.. அப்படின்னார். சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டேன்.
ஒண்ணு பண்ணுங்க.. முடிஞ்ச வரைக்கும் பாருங்க… இல்லன்னா எப்படி நடிக்கணும்ன்னு அவரையே நடிச்சி காட்டச் சொல்லி, அதை அப்படியே மனசுல ஏத்திகிட்ட மாதிரி பொய்யா அதை அப்படியே நடிச்சிருங்க. என்று சொன்னார். நானும் கமல் சொன்னது மாதிரி மணிகிட்ட நடிச்சி காட்ட சொல்லி.. அதை அப்படியே தம்மடிச்சிக்கிட்டு அங்க இங்குமா நடந்துகிட்டு.. பெருசா பீல் பண்ணின மாதிரி பொய்ய சொல்லி ( மீண்டும் பலத்த கரவொலி ) தான் மணிகிட்ட நடிச்சு முடிச்சேன். தாங்க்ஸ் கமல்..,” என்று ரஜினி சொல்லச் சொல்ல, மணிரத்னம், விக்ரம், கார்த்தி, மேடையில் உடன் நின்ற கமல் ஹாஸன் என மொத்த நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.
குறிப்பாக, நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள், ரஜினி பேச ஆரம்பித்தது முதல் பேசி முடிக்கும் வரை அரங்கம் அதிரும் அளவுக்கு விசிலடித்து கைத்தட்டி ரஜினிக்கு தங்கள் அன்பைத் தெரிவித்தார்கள்.